நியூசிலாந்து அருகே பயங்கர நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

நியூசிலாந்து நாட்டுக்கு அருகே உள்ள கெர்மடெக் தீவு பகுதியில் இன்று காலை 7 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அந்த தீவு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.6 என்ற அளவுக்கு பதிவாகி இருந்தது.
 
நில நடுக்கம் காரணமாக கெர்மடெக் தீவு குலுங்கியது. நியூசிலாந்து, டோங்கா நாடுகளிலும் கடும் அதிர்வு ஏற்பட்டது. கட்டிடங்கள் ஆடின. இதையடுத்து மக்கள் அலறியடித்தப்படி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் நொறுங்கின. அதில் சிக்கி ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். ஆனால் உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் குறித்து முழுமையான தகவல்கள் வரவில்லை.
 
கடலுக்கு அடியில் 30 மைல் தொலைவுக்குள் நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததால், சுனாமி பேரலைகள் தாக்கக்கூடும் என்று தகவல் பரவியது. இதையடுத்து கடல் தண்ணீர் போக்கை அளவிட்ட பசிபிக் சுனாமி மைய ஆராய்ச்சியாளர்கள் சுனாமி பேரலைகள் தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர். 500 மைல் தொலைவில் உள்ள நியூசிலாந்து, டோங்காவை சுமார் 2 மணி நேரத்துக்குள் சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஆனால் 8 மணி அளவில் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து, டோங்கா நாட்டு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

0 comments:

Post a Comment